Thursday, December 27, 2012

காகிதத்தில் பகிர்ந்தவை



எழுத்துருவைத் தேர்வு செய்து
ஆவலொன்றே மீந்திருக்க
ஆங்கிலத்தில் விசை தடவி



மொழியைச் சுருக்கி
விதிகள் புறந்தள்ளி
கணினித் திரையிலும் 
கைபேசியிலுமே பகிர்ந்து

மையெழுத்தே மறந்து போய் - வையகத்தே
வந்து சேர்ந்த வசதிகளால்


வரிகளே கானலாகிக்
கனவாகிப் போயிற்றோ,

கையெழுத்து பிடிபடாமல்
போனதொன்றும்

பெரிதல்ல; 

பேனாவில் மை நிரப்பி
பேப்பரில் எழுதி வைத்துக்
கடிதமாய் கையில் நிற்கும்
..

காகிதங்கள் சொல்லிவந்த
கதைகளும் போயினவே.

தவறாகப் பிரித்ததனால்
குறுக்காகக் கிழிந்ததில்
அப்பாவிடம் திட்டு,
அன் டூ செய்யவே முடியாது.

140-க்குள் முடியாமல் 
ட்விட்லாங்கர் போடுமுன்னே
முகவரிகள் நீங்கலாக
மூலையெல்லாம் நுணுக்கிக் கிணிக்கி
வலைப்பதிவே போட்டு விடுவார்
வைரமங்கலத் தாத்தா.

பத்திகளின் இடையில்,
பக்கங்களின் ஓரங்களில்
பட்டாம்பூச்சியோ கிளியோ

கிறுக்கலாய் வரைந்தவைகள்

கண்களை மட்டுமா வருடிக்கொடுக்கும்...

மனக்குரலில்
மழலையாய் ஒலித்துக்
காதுகளும் சற்றே கண்மயங்கும்.

சைக்கிளை நிறுத்தும் சத்தம் கேட்டாலே
முற்பகலில் மூச்சுத்திணறும்
மூளை பரபரக்கும்

மின்னஞ்சல் வந்ததாய்
மினுமினுக்கும் திரையில்லை,
கற்றையாய்க் கொண்டுவரும்
கவர்களில் தேடிடுவேன்.

பிரிவுணர்தலைச் சொல்லுமே
கண்ணீர்த் துளி பட்டு
கரைந்து போன 
வார்த்தையோ
எழுத்தோ ஒன்றேனும்...

தூக்கம் வந்ததெனப் பாதியில் நிறுத்தி
மற்றொரு நாளின் தேதியிட்டு,
அடுத்த பக்கம் ஆரம்பித்த
மீதிக் கடிதத்தின் வரிகளைப் 
படிக்கவே தோன்றவில்ல,

அதன் மீதே உறங்கிப்போன உன்

வாசம் தேடி காகித்தை முகர்ந்தேன்,
கணினித் திரையை என்ன செய்வது?





















Monday, December 3, 2012

Those who are behind the fence are not just safe...



In the age of padminis and savitris (iPad mini and save trees by e-communication), do you remember the ruled notebooks we used to write ’home works’ and not projects and assignments? I, even without knowing I am one, loved the space in the margin than the stuff that was spread all over the lines. What are important are the questions and answers which travel on the lines and at times touch the end of the paper, the font size getting smaller through the end and even trespass into the margin of the next page. I wonder why words like asafoetida, recommendations, appropriateness always occur at the end of the lines and people break it like endations will be hanging under recomm looking like ants running under a branch of a tree and there will be an |____ shaped boundary line too, to avoid cross country affairs with the word below. That is how we started reading between the lines, I presume!

God, let me write something seriously without these comical distractions or nostalgia of a novice.

The stories, the poetry and the answers, even the questions with wrong answers, lacking grammar and spelling, stood majestically inked on the lines, while the numbering either alphabetical or numerical stood behind the line of margin. I was an a), b) or c)… just like someone holding the door or fence and looking into the world without entering into it. The space behind those a, b, c’s were fully theirs. But, they cannot peep, poke or penetrate beyond the margin. I loved the space up to the margin, I used to try different fonts of my own, spread the wings of creativity in numbering or drawing smaller images and enjoy my restricted space as far as I could, without being aware that I am marginalized too.

Then, like everybody, I had grown up too. The whole country looked like a ruled notebook. The contents were there on the lines and the disabled were restricted to stay behind the margin.

We go to beach; stop at the sands.
We go to an office; stop at the stands. 
We wish to explore; stops us, the strands.

If we still struggle for access itself, how can we fight for opportunities? How long will it take for us to get rid of eating near the parking lot at restaurants, meeting officers near pathways and tweeting about it to let it go unnoticed?

Be it education or food; or be it travel or entertainment – in everything, we are just on the edge! We are marginalized. We can just see from a distance, but not mingle with others or participate!

Well, I drive my bike, then get into my wheelchair and go up to the steps and crawl the distance up to stage or a class. Unless I have a concert, I don’t go to temple, attend weddings, a birthday party of even close friends or relatives. We are sinners who are allowed to see the deity only during idol procession of temple festivals. I met The State Commissioner  for the Differently Abled Welfare Development and gave the applications for providing makeshift or permanent ramp for wheel chair access in the temples (of all religions) of our state. To begin with, they can introduce in some places which are famous like Madhurai, Chidhambaram, Kanchipuram, Pazhani, Srirangam, Mosques and Churches of our state. In addition to that, I had also given two separate applications for the Railways and Bus Services. 

In this piss-a- dominated (domino’s pizza)  nation, even kids have mobile phone, one can order and pizza will be delivered even if someone is sitting on a barricade right at the middle of mount road, you can call any bank from under Gemini Bridge and the agent will be obliged to see you there itself sanction a loan or credit card. I think, the government with good concern and noble intentions, is planning to launch facilities for the disabled like  ‘Dial A Toilet', ‘Call A Lift' &  'Ramps at Your Doorstep’ by 2099, just eighty seven years from now.

Some may have been born with a leadership quality with a capacity to be a role model, a guiding light and take hundreds of us to places. Even they will go unnoticed not because lack of opportunities and ability, but because Access is Denied. A ramp with proper angle of elevation and a handrail is what all of us want to make it possible.

Why let places where millions of people walk around be untrodden for us forever?

குனித்த புருவமும் பனித்த சடையும்
காணவென்றே
மனித்தப் பிறவியை வேண்டினான்
என் முப்பாட்டன் ஒருவன்

கால்நடைகளைப் போலவே
இப்போதும் உண்டு
நான்கு கால்கள்;
ஆனால்,
வட்டங்களாய் வளைக்கப்பட்டு
விளிம்புகளில் நின்றபடி.

கடலாய் ஒரு முறையும்
கடைகளாய் ஒரு முறையும்
கோவிலாய் ஒரு முறையும்
கோப்புகளாய் ஒரு முறையும்
தோட்டமாய் ஒரு முறையும்
ஹோட்டலாய் ஒரு முறையும்
கல்விகூடமாய் ஒரு முறையும்
கலவிக் கட்டிலா ஒரு முறையும்
காட்டிலே ஒரு முறையும்
மலையாக ஒரு முறையும்

மனித்தப் பிறவியின் ஊனங்களின்றி,
அதுவாகவே இருந்தேனும்
அறிந்தே கொள்கிறேன்
அச்சமில்லை பிறவிகள் பற்றி.

Wednesday, October 31, 2012

நீலப் புயல்


நேற்று இதே நேரம் ”வெட்சி புனையும் வேளே போற்றி” என, வெட்சிப்பூக்களைச் சுவைத்தபடி மின்னல் போல செடிகள், கொய்யா மரம், வேப்ப மரம் என அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த  குருவித் தம்பதியை இன்று காணவில்லை.

உள்ளங்கையில் உருட்டி வைத்த சிறியதொரு பஞ்சுமிட்டாய் போல மொழுக்கென்ற தலை முதல் வால் வரை கருப்பாகவும், கழுத்தின் அடியிலிருந்து வாலின் அடி வரை மஞ்சளாகவும் இருக்கும் குருவியும் அதன் துணையும் .

காகங்கள் ஓரிடத்தில் அமர்கின்றன; சில விநாடிகளில் அவநம்பிக்கையுற்று அங்கிருந்து கிளம்பி மொட்டைமாடிகளின் பன்னீர் செம்புகளின் இடையே நெருக்கியமர்ந்து, அங்கும் நிம்மதியின்றி வேறு இடம் தேடுகின்றன. கிளிகளும் அவ்வாறே. ஆறேழு காகங்களும் நான்கு கிளிகளுமாய் பறக்க முயன்று, விசை போதாத வில்லிலிருந்து குறி தவறி எய்யப்பட்ட அம்புகளைப் போல் இடம் மாறி விழுகின்றன; காற்று அடங்குவதற்காய்க் காத்திருந்து மீண்டும் மீண்டும் எழுகின்றன.

சிங்கத்திற்கு அஞ்சி மரமேறிய மனிதன் போல, அம்மாவை அணைத்துக்கொண்டிருக்கும் குரங்குக் குழந்தைகள் போல,  முதிராத கொய்யாக் காய்கள் காற்றில் தழைந்து நிலம் உரசும் கிளைகளை இறுகப்பற்றி நிமிர்கின்றன. இன்னுமும், மரத்தின் அங்கமாய்த் தான் இருக்கிறோம் எனப் பசுமையாய் நீலம் நோக்கி நகைக்கின்றன.

பாகனைக் கீழே தள்ள உடல் உலுக்கிப் பிளிறும் மதம் கொண்ட யானை போல, வேப்ப மரம் சிகையை முடிந்துகொள்ளாத கோபமான முனிவன் போல் ஆடுகிறது. கால்கள் இறுக்கி வாரணத்தின் வயிற்றை அணைத்து, ஆவியை மீட்டுக்கொள்ள அலைபாயும் அங்குசமில்லாப் பாகன் போல, ஒரு காகம் தன்  கால்களால் ஒரு கிளையை அழுந்தப்பிடித்தபடி தன் கூடு விழுந்து விடுமோ என்று தியானம் போல அதையே நோக்கியபடி அமர்ந்திருக்கிறது. அது சொல்லும் செய்திகளின் ஓசைக்கு, வேறு மூலைகளிலிருந்து சில காகங்கள் இருந்த இடத்திலிருந்து பதிலளிக்கின்றன. இணையச் சூழலின் இம்சைகள் ஏதுமின்றி அவை ஆரோக்கியமாக விவாதிப்ப்பதைப் போலவே தோன்றுகிறது.

காகம் - கூடு
காற்றுக்கு மரம் சாய்ந்தபோது, காக்கையின் யாக்கையின் பின்னே வெளிச்சம்.



புதிதாகக் காரோட்டும் பக்கத்து வீட்டுக்காரர் ஹோண்டா சிட்டியின் ஆக்ஸிலரேட்டரில் வைத்த காலை பின் வைக்காமல், அநியாத்துக்கு அமுக்கியபடி, அடிப் பிரதக்ஷிணம் போல அதை காம்பவுண்டை விட்டு வெளியே எடுத்து, ஐந்து நிமிடங்களுக்கு ஐம்பதடி என்ற விகிதத்தில் காரைச் செலுத்தி நீலத்தின் வேகத்தைப் பகடி செய்கிறார்.

‘ஏண்டி கிருத்திகா.. அது என்ன எதாவது போர்வெல் ரிக் வண்டியா? இந்தக் கத்தல் கத்தறதே’, என்றேன். அவள் குறும்பாகச் சிரித்தபடி, ‘ மாமா... அது வூஃபர் கார்’ என்றாள்.

இதற்கிடையில் கேத்ரினா, ஸாண்டி, நீலம் (நிலமா நீலமா என்ற குழப்பம் வேறு) என்று புயலுக்கு ஏன் பெண்கள் பெயராகவே வைக்கிறார்கள் என்று ட்விட்டர்-ஃபேஸ்புக் மஹாஜனங்கள் கவலைப் பட்டார்கள். நானும் கற்பனை ஊற்று பொங்கி வாரியடிக்க என்னாலான ஸ்டேட்டஸ்களைப் போட்டேன்.

1. பயலா இருந்தா ஆம்பள பேர் வெக்கலாம். புயலாச்சே, அதான் பொம்பளங்க
பேர் வெச்சுட்டாங்க.

2. அட்லீஸ்ட், அடுத்த புயலுக்காவது ‘வெடிமுத்து’ சூனாபானா’ ‘வடக்குபட்டி
ராமசாமி’-ன்னு ஆம்பளங்க பேர் வெய்யுங்கப்பா.

3. கண்ணா, அடிச்சுப் பேஞ்சுதுன்னா அது நீலம்; தூறிட்டு விட்டுட்டா அது
சொட்டு நீலம் #Cyclone #Nilam

4. நாளைக்கும் இஸ்கோலு, காலேசு எல்லாம் லீவாம். விடுமுறை தின சிறப்பு
கண்ணறாவியெல்லாம் பாத்துக்கிட்டிருக்காம கத்திக்கப்பலாவது செஞ்சு
வெள்ளாடுங்க புள்ளகளா.

5. முன்பெல்லாம் ஏகபட்ட கட் அவுட்டுகள் இருக்கும்,காற்றும் தடுக்கப்பட்டு
பிரிக்கப்பட்டு திசைமாறி வலுவிழக்கும்.இப்போ எங்க அதெல்லாம் ஹ்ம்ம்..

6. நிலமா நீலமா என்று கேட்டால், புயல் பாதிப்புகள் அதிகமாக இருப்பின்,
நீலமா(க) நிலம் & நீல மாநிலம்.

7. It made the Sandy Marina into a Watery Beach and the beach road to Sandy Road.
#Nilam > Sandy.

8. 
இதுவும் கடந்து போகும்; This shall too pass.
#Nilam 
#Cyclone 
#Major :)))

9. 
மாமல்லபுரம் வழியாக வேலூர், தர்மபுரி வழியாக நிலத்தைக் கடந்து
செல்லும் - வானிலை மையம். 
அப்போ, நீலம் கடந்த நிலம்-னு ஒரு   கட்டுரை யாரானும் எழுதுவாங்களா?


அணில்களும் பூனைகளும் எங்கேயென்றே தெரியவில்லை. ஒரு வெட்டுக்கிளி பறந்து வந்து கதவில் அமர்ந்து என்னை சற்றே நோட்டம் விட்டபின், இங்க தங்கி உன்னையெல்லாம் என் ரூம் மேட்டாக வைத்துக்கொள்ள முடியாது என ஏற இறங்கப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டது.


Wednesday, October 17, 2012

மறதி


முந்தா நாள் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கச்சேரிக்குக் கொண்டு சென்ற ஒலிம்பஸ் டிஜிட்டல் வாய்ஸ் ரெகார்டரை அங்கேயே மறந்துவிட்டு பாதி தூரம் வந்துவிட்டேன். திரும்பப் போய்த் தேடியும் விசாரித்தும் பார்த்ததில் இப்போது வரை கிடைக்கவேயில்லை; இனியும் கிடைக்க way இல்லை.
எங்கிருந்து ஆட்கொள்கிறது மறதி?

இப்போது தான் ஆனந்த விகடனில் மரம் கருணாநிதி பற்றிய கட்டுரை படித்தேன். பேட்டியின் முதல் வரியே ஆச்சிரியம். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே இல்லாத நாட்களில் போகிற வழியில் அரசல் புரசலாகக் காதில் விழுந்த பாடல் அது.

’தாய் நிலம் தந்த வரம் தாவரம்.. அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்’

எம்.எஸ்.வி.யின் குரலோடு அதன் மெட்டும் திஸ்ர கதியும் சேர்ந்து மனதினுள் குரலாய் ஒலித்தது. எப்படியும் இருபது வருடங்களுக்குக் குறையாமல் இருக்கும் இப்பாடலைக் கேட்டு. எது நினைவில் இருத்தியது இதை, இவ்வளவு அழுத்தமாய்? இப்போது முணுமுணுக்கையில், ’பறந்தால் மேகங்கள் ஒடினால் வானங்கள் பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள் - இனிமை நிறைந்த உலகம் இருக்கு’ என்று ’மகிழ்வார்கள் யாவரு’மிற்குப் பிறகு கோத்துவிட்டால் தாளமும் மெட்டும் பொருந்துகிறது.  அதைச் ச்துஸ்ரமாக 4/4-ல் பாடினால் ’காடெல்லாம் பிச்சிப்பூவு... கரையெல்லாம் செண்பகப்பூவு.. நாடே மணக்குதுங்க - அந்த நல்ல மக போற பாதை...’ என்றும் கேட்கிறது. கிராமிய இசையின் மெட்டு அது.

எதற்குச் சொல்கிறேன் என்றால், எப்போதோ கேட்ட ட்யூனுக்குப் பொருத்தங்கள் கூட இப்போது தோன்றுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஐஃபோன் தொலைந்தது; அதற்குச் சில வருடங்கள் முன்பு வேறு ஒரு ரெக்கார்டர், பென் ட்ரைவ். இவை தவிர, அடிக்கடி தொலைக்கும் பேனா, பர்ஸ், புத்தகம், ரசீது மற்றும் எங்கே வைத்தோம் என்ற நினைவுப் பிழைகள் வேறு. எப்படியும் எதையாவது தொலைத்தோ மறந்தோ விடுகிறேன். பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆண்டுப்பலனை மேய்ந்த பொழுது, ‘உங்கள் ராசிக்கு குடையை எங்கு வைத்தோம், கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு தான் வந்தோமா என்பன போன்ற விஷயங்களை நீங்கள் மறந்து விடுவீர்கள். ஆனால், முக்கியமானவற்றை மறக்க மாட்டீர்கள்’ என்று படித்துவிட்டு மகிழ்ந்ததை எண்ணிக்கொள்கிறேன். இப்போது, ’இதுல என்ன சிரிப்பும் சந்தோஷமும் வேண்டிக்கெடக்கு உனக்கு, புத்திகெட்டுப் போயிண்டு இருக்கே, தெரியறதோ... மான்கெட்’, என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

பார்த்தீர்களா... தலைப்பு வெக்கவே மறந்து, அப்படியே பதிவிட இருந்தேன்!

இன்னும் கொஞ்ச நாள் ஆனதும்,  Blog-லயா Twitlonger-லயா, 750words-லயா Facebook-இலா ட்விட்டரிலா... எதில் பகிர்கிறேன் என்றெல்லாம் குழப்பம் வருமோ?

Tuesday, October 2, 2012

வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம் - என்.சொக்கன்

புதிய ‘புதியதலைமுறையில் நண்பர் என்.சொக்கன் எழுதிய கட்டுரை. #MustRead.


செப்டம்பர் 10-ஆம் தேதி என்னை அழைத்து www.axsmap.com என்ற இணையதளம் பற்றிச் சொன்னார். அதை உடனே பார்த்து, என் அபிப்ராயத்தையும் அவருக்கு எழுதினேன். ஆனால், அவர் கட்டுரையைப் படித்த பின் இன்னும் நன்றாகப் புரிவதுபோல் இருக்கிறது. அதனால் தான் அவர் எழுத்தாளர். :)

ஸ்கேன் செய்து விரைவில் பகிர்கிறேன், பு.த. அனுமதி கிடைத்தால். என்னுடைய கருத்தும் வெளியாகியிருக்கிறது. அதை இப்போது.

ஆக்ஸஸ்மேப் போன்ற ஒரு தளம் நம் நாட்டிலிருக்குமானால் உபயோகமாக இருக்கும்.  அதை எத்துணை பேர் உபயோகிப்பார்கள் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிராமல் ஆங்காங்கே, பயணிக்கின்ற என் போன்றவர்கள் அதில் இடங்களைக் குறிப்பிட்டு சிறு குறிப்பு எழுதும் வகையில், அந்நிறுவனங்கள் தாங்களே முன்வந்து விவரங்களைத் தரும் வகையில், Accessibility Unknown என்கிற இடங்களைத் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ  தொடர்பு கொண்டு ஏன் இல்லை என்பது போன்ற கோரிக்கையோ, வலியுறுத்தலோ வைக்கும் வகையில் அவை இருக்கலாம். சுற்றுலா பற்றிக்கூட இதைஒருநாள் பார்த்தேன்.

பல இடங்களில், இதற்கான உணர்வு இருக்கிறது. ஐயோ, இவர்கள் சிரமப்படுகிறார்களே என்ற மனவருத்தத்தையும் சமூகம் பதிவு செய்கிறது. ஆனால், அது பெரும்பாலும் உபயோகமாய் ஏதேனும் நிகழ்வதற்காகவின்றி, சமூகம் தன் குற்ற உணர்வில் இருந்து மாயையாக தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்காகவே உள்ளது. அப்படியே, ஒரு சாய்வுப் பாதையோ, அதற்குக் கைப்பிடியோ, லிஃப்டோ அமைப்பவர்கள், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேல் அவை பற்றிய புரிதலே இல்லாதிருக்கிறார்கள். Angle of elevation, Space needed inside a lift, handrail with grip, how wide a ramp should be என்பதெல்லாம் (தெரியாமல் என்று சொல்லமாட்டேன்) அலக்ஷியப்படுத்தப்பட்டே அவை நிர்மாணிக்கப்படுகின்றன. 

கல்வி, உணவு, பயணம், கேளிக்கை போன்றவற்றில் நாங்களும் ’விளிம்பு நிலை மனிதர்கள்’ தான். மீனாட்சி கல்லூரிக்குக் கச்சேரி வாசிக்கப்போன போது, அங்கு பொறுப்பாளர்கள், லெக்சரர்களிடம் ramp குறித்துப்பேசினேன். நடக்கமுடியாத ஒரு பெண் தடைகளைத் தாண்டி தங்கள் கல்லூரியில் படிப்பதாகப் பெருமை பட்டுக்கொண்டார்கள். “ஏம்மா, ஒங்ககிட்டயெல்லாம் இவ்வளவு கல்வியறிவு இருக்கு. கம்யூனிக்கேஷன், அரசியல், கலாச்சாரம் எல்லாம் சொல்லித் தருகிறீர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான மாணவிகளின் சேற்றுக்காலடி மண்ணை உடலெங்கும் தீற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணைப் பெருமையாகப் பேசுவதை விடுத்து, சில ஆயிரங்கள் செலவுல வேணுங்கற எடங்கள்ல ரேம்ப் வெக்கக்கூடாதா என்று கேட்டேன்’ அவர்களின் பாரம்பரியப் பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வினாவொன்றை விடுத்ததாய் வெறுப்புப் பார்வையொன்றை வீசியதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை அவர்கள்.

நாங்கள், விளிம்புநிலை மனிதர்கள். ரயில் நிலையங்களில் நுழையலாம்; ரயிலுக்குள் நுழைய முடியாது. கடலென்றால் மணலின் ஸ்பர்சம் கூட தெரியாது; தூரமாய்ச் சாலையில் இருந்து எட்டிப்பார்க்கவேண்டும். திரையரங்குகளின் வாசல் வரை செல்லலாம். தப்பித்தவறி உள்ளே நான்கு பேரகளாய்த் தூக்கிச் சென்றுவிட்டாலும், குளிர்பானம் ஏதும் குடித்து வைத்து இயற்கையின் அழைப்பை ஏற்க நேர்ந்தால், ப்ராரப்த கர்மம் என்பதை அநுபவித்துத் தெரிந்துகொள்ளலாம். உனவகங்களுக்குச் செல்லலாம்; பார்க்கிங் அல்லது பாத்ரூம் அருகே சாப்பிடவேண்டும். பாவமூட்டைகளால் நிரம்பிய முதுகோடு எந்தக் கோயில் படிக்கட்டையும் தாண்டவியலாது. வீதியுலா வந்தாலன்றி இறை தரிசனம் இல்லாது போகும். வீல்ச்சேர் இருந்தாலும் நடைபாதையில் ஏற முடியாமல், பல்லவன்களுக்கும் தண்ணி லாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திப் பிழைக்கவேண்டும். ஏனெனில், நடை பாதைகள் சாய்வு அமைப்பின்றியும் போதிய அகலமின்றியோ, குறுக்கே ஒரு விளக்குக் கம்பமோ அல்லது அங்கும் திறந்தே கிடக்கும் ஒரு பாதாளச் சாக்கடைப் பள்ளமோ இல்லாமல் இருக்காது.

புதுதில்லியில் ஒரு இடம்
சென்ற மாதம் சென்னை வானொலி நிலையத்தில் கச்சேரிக்காக குறித்த நேரத்திற்கு முன்பே சென்றும், பாதையின் குறுக்கே நின்ற வாகனத்தால் வெகு நேரம் காத்திருந்தேன்.
தலைநகரம் முதல் தாய்நாட்டின் மறுகோடி வரை இது தான் நிலை. சாலையில் விரைந்துகொண்டிருக்கையில் பெய்கின்ற எந்த ஒரு மழையும் என்னை நனைத்து ஊற வைக்காமல் இருந்ததில்லை. கடைகளின் வாசல்களும் பேருந்து நிறுத்தங்களும் இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன கோவர்த்தன கிரிகள். அதைச் சுட்டு விரலில் தாங்கி மக்களை வாழ்விக்கும் அரசும் தனியார் நிறுவனங்களும், ஆள்காட்டி விரலை அரசியலுக்கும், மோதிர விரலை கூட்டணிகளுக்கும், கட்டைவிரலை நாமம் போடுவதற்கும் நேர்ந்துவிட்டதால், எங்களைப் போன்றவர்களுக்காக மீதம்வைத்திருப்பது நடு விரல் தான். 

மொபைல் இல்லா மனிதர்களே இல்லா இத்தேசத்தில், நடுத்தெருவில் நின்றபடி பீட்சாவும் பர்கரும் ஆர்டர் செய்து உண்ணமுடியும், ஜெமினி பாலத்தின் அடியில் இருக்கிறேன் வந்து பார் என்றால் வங்கி முகவர்கள் அங்கேயே வந்து கடன் கூட கொடுப்பார்கள். எது முக்கியமாக வேண்டுமோ அது தான் இருக்காது. எங்களுக்காக 'Dial A Toilet', 'Call A Lift', 'Ramps At Your Doorstep' போன்ற உன்னதமான திட்டங்களை மனதில் தேக்கி, அன்பு பொங்கக் காத்திருக்கக்கூடும் அரசுகள்.

உணவகங்களும், தியேட்டர்களும் இருக்கட்டும்; ஊனமுற்றோர்-வயதானவர்களின் அத்யாவசியத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலே, சமூகத்தில் சற்று கௌரவமாக வாழ்ந்துவிடுவோம். ஓட்டுப் போடுமிடங்களில் கட்டாயமாக்கப் படுகின்ற சாய்வுப் பாதைகள், வேறெங்கும் இல்லையெனினும் எவரும் கவலைப் படுவதில்லை.

அரசும் தனியாரும் சமூகமும் ’நான் கால் வெக்கற எடத்துல தான் நீ கை வெக்கற.. அடங்கு’ என்று பஞ்ச் டயலாக் பேச ஆசைப்படுகின்றனவோ என்னவோ.

Tuesday, August 14, 2012

என்ன லேங்க்வேஜுய்யா இது...


நான் தமிழை ஐயம் திரிபறக் கற்றவனில்லை. தமிழ் மீது தாய்மொழி என்ற மரியாதையும் பற்றும் உண்டு. சீர், அசை எல்லாம் கூடத் தெரியாது. சமீபத்தில் முயன்று, ஆனால், அதன் பிறகு கச்சேரிகள், பயிற்றுவித்தல் என திடீரென முனைப்பாக நேர்ந்ததால் அதுவும் இடையில் நின்றுபோனது :(

தமிழ் எழுத்துகளை வைத்துக்கொண்டு இந்தியாவின் ஏனைய மொழிகள் போல் உச்சரிப்பு வித்யாசங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. நாலு கா, சா, டா, தா, பா இல்லாமல் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என தமிழ்மொழி குறித்த தாழ்வு மனப்பான்மை அல்லது கவலையினால் துன்புறும் வாசகங்களை அவ்வப்போது கேட்க நேர்கிறது.

இவை பற்றி எனக்கு உள்ள கருத்துகளை எழுதிப்பார்த்தேன்.


1. பாருக்குள்ளே நல்ல நாடு என்று படிப்பதா, Bar-க்குள்ளே என்று பாடி மகிழ்வதா என்ற வினா எழும்புவது இயற்கையே.

thOtutai-ய சிவனா? thOdudaiya சிவனா? thOdutai? dhOdudai என்றெல்லாம் ’அகும்பதம்-அன்பு இதம்’ போட்டுப் பார்ப்பது கிண்டலுக்குத் தான் உதவும்.

தமிழில் வல்லினம் என்ற சொல்லின் பொருளை நான் வலிமை, பலம், சக்தி என்று பார்க்கிறேன். 100 கிலோ எடையைத் தூக்கும் அதே கரங்கள் தான் மலரையும் மழலையையும் ஏந்துகின்றன. எனவே, வல்லினம் என்பது எடைக்குத் தகுந்தாற்போல், நிறைக்குத் தகுந்தாற்போல் வரக்கூடிய ஒலி. காகம், பண்பு, தந்தை என்று அதில்  புரிந்துகொள்ளக்கூடிய பொதுத்தன்மையும் இருக்கும்.

எனவே, வல்லினம் என்பது இடத்தைப் பொருத்தது என்றறிக. Bar-the-fun அல்ல; pArththiban என்று common sense, பிற மொழியறிவு, பழக்கம், கற்றல் என்று பல காரணங்களால் புரிந்துகொள்ளப் படுவது.  பல வேடங்களில் பார்த்துப் பழகிவிட்டதால் ஒரு நடிகனை இமேஜ் வட்டங்களின்றி எளிதாக எடுத்துக்கொள்ளுதல் போல.  மனைவிக்குக் கூட கணவன் மேல் திகைப்பு ஏற்பட்லாம்; ஆனால் அப்பா தரும் ஆச்சிரியங்களை ஒரு குழந்தை திகைப்புகள் ஏதுமின்றி, மகிழ்ச்சி மட்டுமே கொண்டு ஏற்றல் போல. முதலிலிருந்தே பழகிவிடும்.

ஆங்கிலத்தின் G என்ற எழுத்து (god, gill, good) ga gA, gi gee, gu goo(gle) என்றும் அதே எழுத்து ஜி, ஜா என geography, gentle என்றும் வருவதைப் புரிந்துகொள்கிறோம்; But-பட், put-புட் என்றால் புரிந்துகொள்கிறோம். But, தமிழ் மட்டும் என்ன பாவம் செய்தது? ஒரே அலைபேசிக் கருவிக்குள் இன்று Diary, Organiser, Gamer, TV, FM, Internet, Media etc. அனைத்தும் இருப்பதை தொழில்நுட்ப வளர்ச்சி என்றால், ஒரே எழுத்தை நான்கு விதமாய் இடத்திற்கேற்றவாறு உச்சரித்தல் வளர்ச்சி தானே?

இணையம், பதிவு, வலைப்பூ, அலைபேசி எல்லாம் இல்லாத காலத்திலேயே நான் இக்கருத்துகளையெல்லாம் பேராசிரியர் நன்னனிடம் சொன்னேன். அவர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. (அப்போது கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் இருந்தார்) :)

2. Pre-KG, Creche எல்லாம் வருவதற்கு முன், ஐந்து வயதிலிருந்து பதின் பருவம் வரை நாமெல்லாம் குழந்தைகளாகவே இருந்த வரை, இக்குழப்பங்கள் இந்த அளவிற்கு இல்லை என்று எண்ணுகிறேன். ‘நேத்திக்கு நாங்கெல்லாம் ஊருக்குப் போவோமே’ என்று சொல்கிற அதே குழந்தை அடுத்த மாதமே இலக்கணம் தெரிந்துகொள்வதைப் போல, மொழியறிதலின் சுகம் எங்களுக்கெல்லாம் இருந்ததோ எனத் தோன்றுகிறது. அனுபவ அறிவு, கேட்டலில் விளைவது என்னுமாப்போலே லக்ஷிய ஞானம் வந்த பின்னரே இலக்கணம், வரையறைகள் அறிந்த லக்ஷண ஞானம். அப்படிக் கைவரும் அறிவே இயல்பானது என்றும், தங்குவது என்றும் நம்புகிறேன்.

3. தமிழில் 247 எழுத்துகள் என்று பள்ளிக் குழந்தைகளை Gange Rape (சொல்லாடலுக்கு மன்னிக்கவும்) செய்யும் வன்முறையின் நுகபிநி என்ன என்று விளங்குவதேயில்லை. உயிர்-மெய்-உயிர்மெய், சில சிறப்பெழுத்துகள் தவிர மற்றவை குறியீடுகள் தான். அவற்றையும் எண்ணிக்கையில் வைத்து, ஊதிப் பெரிதாக்கி ஆத்தாடீ.. இம்புட்டு input-ஆ எனத் திகைப்படைய வைத்தலைத் தவிர்த்தல் நலம்; மொழிக்கும்-குழந்தைகளுக்கும்.

4.

5.

(நிரப்பப்படாத எண்களின் வரிசை நமக்குத் தான், இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, வாசிக்க, எண்ணிப்பார்க்க பலவும் பிடிபடும். எண்களுக்கும், எண்ணங்களுக்கும் ஏதய்யா முற்றுப்புள்ளி?)

Sunday, July 29, 2012

கிருஷ்ண பட்சம்

மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ப்ரொஃபைல் ஃபோட்டோவில் ஹரிஹரன் சிரித்தபடியிருந்தான், அவன் நண்பர்கள் ஃபேஸ்புக் சுவற்றில் அவனைக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று உயரம் குறைவாய், ஒரே பையன், உச்சந்தலையில் சிறியதாய் ஒரு பள்ளம் உண்டு என்ற கூடுதல் சலுகையில் எல்லா அபிலாஷைகளும் நிறைவேற்றப் பட்டுவிடும் பூரிப்பில் சிரித்துக் கொண்டிருந்தான்.

இல்ல சார்.. இதோ பாருங்க. சர்டிஃபிகேட் ரெடி, அவர் கையெழுத்து போட்டுட்டார்னா குடுத்திருவோம்’

‘அதுக்காக இவ்ளோ ரூபா கேக்கறீங்களேப்பா… திடுதிப்னு எங்க போறது, ஆத்துல அவ வேற தனியா தவிப்பா’

ஒரு முன்னணி நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை. அம்மாவிற்கு சங்கீத ஞானம் உண்டு. சில குழந்தைகளுக்குக் கற்பிக்கவும் செய்தாள். என் அக்காவின் மகன் அருணுக்கு கல்லூரித் தோழன். கிரிக்கெட்டில் கொள்ளை ஆசை. உயரக்குறைவினால் தடைகள் இருந்தன. நல்ல திறமையிருந்தாலும், செலவு செய்து கற்றுக்கொண்டாலும் பிரயோஜனமில்லை, எந்த டிவிஷனிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொன்னார் கோச்.

நாங்க என்ன, எங்களுக்கா கேக்கறோம். எங்களுக்கு என்ன சார்.. அங்க, அவருக்குக் குடுக்கணும். குடுத்தீங்கன்னா கையெழுத்து ஆயிரும்.. போய் ஆகவேண்டியதப் பாக்கலாம்’

ஒரு மத்திம வயதுக்காரர், பையனின் மாமாவாக இருக்கக்கூடும், விரைந்தார். அங்கே போய், செலவைப் பற்றிக் கவலையில்லை. சர்டிஃபிகேட் கிடைத்தால் போதும் என்று சொல்லி, விரைவாக முடிக்க ஏதுவான கார்யங்களில் இறங்கினார்.

தகுதிக்குறைவானால் என்ன, எனக்கு விளையாட வேண்டும் முறையான பயிற்சி தான் வேண்டும், என்னை சேர்த்துக்கொள்ளுங்கள், கற்றுக்கொள்கிறேன். கிரிக்கெட்டை எவ்வளவு காதலிக்கிறேனென்று உங்களுக்குத் தெரியாது, என்று சேர்ந்துவிட்டான். வேலை, வார இறுதிகளில் உடற்பயிற்சி, கிரிக்கெட், கொஞ்சம் மிமிக்ரி, வெளியாகும் படங்களை உடனுக்குடன் பார்ப்பது எனப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் அலமாரியில் படுத்திருந்த மிருதங்கம் அவன் கண்ணில் பட்டது. பல வருடங்களுக்கு முன் கொஞ்சமே கொஞ்சம் கற்றுக்கொண்டது.

அங்கேயும் மத்திம வயதுக்காரரிடம் அதைத்தான் சொன்னார்கள். ’நாங்க ஒண்ணும் வாங்கறதே இல்ல சார். அவங்க தான். குடுத்திருங்க, இல்லாட்டி இழுத்தடிப்பாங்க… கெடைக்கமுடியாமப் போக என்ன உண்டோ எல்லாம் பண்ணுவானுக’.

‘சார் பணத்தைப் பத்திக் கவலையில்ல.. சீக்கிரம் கையெழுத்துப் போட்டுட்டீங்கன்னா…’ முடிப்பதற்குள் அவரின் குரல் உடைந்தது.

சின்ன வயதில் கற்றுக்கொண்டது. அருணின் மாமா வாசிப்பார். எப்பொழுது அருண் வீட்டிற்குப் போனாலும் மிருதங்கம் கேட்டுக்கொண்டேயிருந்தது. யாராவது பாடிக்கொண்டோ, வாசித்துக் கொண்டோ இருந்தார்கள். அவரிடம் கேட்கவேண்டும். சேர்த்துக்கொள்வாரா தெரியவில்லை. வீட்டிலிருக்கும் மிருதங்கத்தை சரி செய்ய வேண்டும். ‘……………… அவர்கள் வயலின், மிருதங்கம் – ஹரிஹரன் சிவசங்கரன்’…. இமைகளை மூடியதும் அகில இந்திய வானொலியின் அறிவிப்பு கேட்டது, கனவில், யாரோ ஒரு சாஸ்திரிகள் மாலை போட்டு, பொன்னாடை போத்தினார். ஒரு கோவில் உத்ஸவத்தின் கச்சேரி போன்று இருந்தது. ஹரிஹரனுக்கு தூக்கத்தின் இடையே இதழோரம் ஒரு புன்னகை அரும்பியது.

சர்டிஃபிகேட் கிடைத்துவிட்டதா என மத்திம வயதுக்காரரைப் பார்த்தால் தெரியவில்லை. அவர் சற்றே இறுகிய முகமாயிருந்தார். அங்குமிங்கும் ஓடிக்கொண்டேயிருந்தார். எல்லோருமே இரும்பு கேட்டிற்கு வெளியே நின்றபடி காத்திருந்தார்கள். யாருடைய அலைபேசியாவது அடித்துக்கொண்டேயிருந்தது. ஒவ்வொரு அழைப்புமே எல்லோரையும் சற்று பரபரக்க வைத்தது. மாமாவுடைய ஃபோனுக்கும் கால் வந்தது. யாரோ பதில் சொன்னார்கள். அவர் வீட்டிலிருப்பவர்களைப் பார்த்துக்கொள்ளும்படி யாரிடமோ கட்டளையும் இல்லாமல் கோரிக்கையும் இல்லாமல் ஏதோ சொன்னார்.

மறுநாள் மிருதங்கம் மாஸ்டரை சந்தித்துவிட்டேன். அவர் சிரிக்கச்சிரிக்கப் பேசினார். இடையிடையே சீரியஸாக ஒரிரு வரிகள் வந்து விழுந்தன. கிரிக்கெட் விளையாடுவதைப் கூட பரவாயில்லை, ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டார். சகஜமாக உணர்ந்தேன். தல படத்துக்கு ரிஸர்வ் செய்திருப்பதைக் கூட தைரியமாய்ச் சொன்னேன். அடுத்த சில நிமிடங்களுக்கு எந்த டாபிக் பேசினாலும் அதில் அஜித்தை டேமேஜ் செய்துகொண்டேயிருந்தார். எல்லோரும் சிரித்தோம். வந்து அம்மாவிடம் சொன்னேன். ‘வர்ற பதினஞ்சாம் தேதி நாள் நல்லாயிருக்காம், அன்னிக்கு என் நக்ஷத்திரத்துக்கு சந்தாஷ்டமோ என்னவோ சொன்னார், அது இல்லையாம்.. மத்யானம் வரச்சொன்னார்’ அம்மாவின் முகம் எல்லாம் சந்தோஷம். இன்று இரவு எனக்கு மிகவும் பிடித்ததான ஒன்றைத்தான் அவள் சமைப்பாள் என்று தெரிந்தது.

’மொதல்ல இட்டாந்தவரு ஒரு கையெழுத்துப் போட்டு எழுதிக்குடுத்துட்டாருங்க. இப்ப, நீங்க தான் சொந்தக்காரங்கன்னு எழுதிக்குடுக்கணும். ஒண்ணும் ஆபத்து இல்ல, வில்லங்கம் இல்லன்னு மேற்படி அதான், நம்ப …………. அவரு சர்டிஃபிகேட் குடுப்பாரு.. இந்தாம்மா… அன்னாண்ட போ… பேசிக்கினு இருக்க சொல்லோ இங்க வந்து மூக்க சீந்தறியே.. அதனால, நீங்க எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அமவுண்ட்ட கொண்டாந்துருங்க.. அப்புறம் அஞ்சு மணி, ஆறு மணி ஆயிடுச்சுன்னா, எதுனா டூட்டி கீட்டி மாறிச்சுன்னா கஸ்டமாயிரும்… ஒரே புள்ளன்றீங்க’

அடுத்த வாரம் முழுவதும் நைட் ஷிஃப்ட். மாஸ்டர் ரெண்டு கிளாஸ் சொல்லித்தந்துவிட்டார். கொஞ்சம் பழசெல்லாம் ஞாபகம் வருகிறது. வெள்ளிக்கிழமை மியூசிக் அகாடமியில்அவர் வாசித்த கச்சேரிக்குப் போனேன்; நன்றாக இருந்தது. கச்சேரியை விட, அது முடிந்து கீழே வந்து எல்லோரிடமும் ஒரு ஸ்பீச் போட்டார். அதை நினைத்து இரவெல்லாம் சிரித்துக்கொண்டேயிருந்தேன். சனிக்கிழமை காலையில் ஹவுஸ் கிரிக்கெட் விளையாடவாவென்று அருண் கூப்பிட்டான். ஆனால், வெள்ளி இரவு ஷிஃப்ட் முடிந்ததும் அடையார் அருகில் க்ரவுண்டுக்கு வருமாறு ஆஃபீஸ் டீம் சொல்லிவிட்டது. பழனி என்னிடம் வந்து போலாமா எனக்கேட்ட போது மணி 4.30AM இருக்கும். இருவரும் ஒரே காலேஜில் படித்து இப்போது ஒரே இடத்தில் ஒரே மாதிரி வேலை. நான் மிகுந்த சந்தோஷமாக இருப்பதற்குப் பொறாமைப் படாதீர்கள். சிலருக்கு அப்படித்தான், எல்லாம் பிடித்த விதமாக அமைந்துவிடும். பழனி எப்போதும் என்னுடன் தான் வருவான். நான் தான் ஓட்டுவேன், அவனுடைய டிஸ்கவரில் சென்றால்கூட. அதுவும் அவனை ஓட்டச் சொன்னால் 40, 50–ஐத் தாண்டமாட்டான். அன்று ஏனோ, நான் பின்னால் உட்கார்ந்துகொண்டேன். பீச் ரோடு சில்லென்று காலியாக இருந்தது. காலையில் கிழவர்கள் பீச்சுக்கு வருவதைத் தடை செய்யவேண்டும். நைட் ஷிஃப்ட் முடிந்து வருபவர்களுக்காக ஸ்டெல்லா மாரிஸ், எதிராஜ், எம்.ஓ.பி. யில் படிப்பவர்கள் டென்னிஸ் விளையாடலாம். யோகாசனம் கூடச் செய்யச் சொல்லலாம். சில்லென்று விசிலடித்தேன்.

’இந்த ஹைட்டுக்கு பல்ஸர் எல்லாம் ஓட்டக்கூடாது சார். அது பிக்கப் வேற தாஸ்தி. சட்டுனு மேனேஜ் பண்ணி கால் ஊன்றதெல்லாம் கஸ்டம் பாருங்க… அதுலயும் இப்பத்தி பைக் எல்லாம் பின்னால தூக்கினு இருக்கு. சின்னதா ஒரு ப்ரேக் போட்டா கூட, பின்னால இருக்கறவன் நம்ம முதுகுல வந்து வீள்றான்… என்னமோ டிஸ்க்கு ப்ரேக்காமே அத்த வெச்சுகினு இதுங்களும் சல்லு சல்லுனு போவசொல்லோ பயமாயிருக்கு…’

’இன்னும் எவ்ளவோ பேரு இருக்காங்க. அமவுண்ட் கொண்டாந்திட்டீங்களா? வூட்ல கஸ்டம் பாருங்க… வந்திருச்சா வந்திருச்சான்னு… எத்தினி பேர் சார் ஒங்களுக்கு?’

அருண்… அருண்… என்று என்னை மாமா கூப்பிட்ட போது ஹவுஸ் கிரிக்கெட்டை பாதியில் இருங்க என்று சொல்லிவிட்டு வந்தேன். கார்ப்பொரேஷன் பேங்க்குக்கு தாத்தாவைக் கூட்டிண்டுபோய் என்று ஏதோ வேலை சொல்லிவிட்டு அவர் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நத்தின்தின்னாக்கள் பழகிவிட்டது, எனக்கும். ஆனால், பேங்க்குக்கும் போகமுடியாமல் கிரிக்கெட்டும் ஆட முடியாமல் ஃபோன் வந்தது. உடனே ராயப்பேட்டை போக வேண்டும். நானும் வருகிறேன் என்று மிதுன் சொன்னான். இருவருமே பதட்டமாக, கவனமாக அண்ணா சாலையில் விரைந்தோம்.

’ஃப்ரெண்டு தான் வண்டி ஓட்டீருக்காரு. எங்களுக்கு நாலரை, அஞ்சுக்குத் தான் தகவல் வந்தது. பின்னாடி கொஞ்சம் குள்ளமா ஒருத்தரு, அவர ராயப்பேட்டைக்கு அனுப்பிச்சிட்டு, ஓட்டினவர ஆழ்வார்பேட்டைக்கு அனுப்பிச்சிட்டோம். ஃபார்மாலிட்டீஸ் முடிஞ்சிருச்சின்னா, ரிப்போர்ட் வந்திரும். ஒண்ணும் பயப்பட வேணாம், விபத்துன்னு எழுதியிருப்பாங்க, என்ன சாப்டாங்க, எத்தன மணிக்கு உயிர் போச்சுன்னு சொல்லுவாங்க. நீங்க பையனுக்கு அப்பாங்களா? தைரியமா இருங்க. ஒரே பையனா… அடடா……’

’மாமா… ஹரிஹரனுக்கு ஆக்சிடெண்ட்டுன்னு இங்க வந்தோம்… அவன் பீச் ரோட்டுல லாரி இடிச்சு ஸ்பாட்டுலயே செத்துட்டானாம்…  பழனி வருவான்ல, நம்மாத்துக்கு.. கிரிக்கெட் வெளயாட, அவன் தான் ஓட்டினானம். அவனுக்கு மூளையெல்லாம் அடி, ப்ளட் க்ளாட் ஆயிடுத்தாம். வேற ஹாஸ்பிடல்ல இருக்கான். எங்கள எல்லாம் பாத்துப் பாத்து ஹரி அப்பா அழறார். எங்களுக்கும் அழுகையா வர்றது…. அவருக்கு ஷுகர் வேற. மயங்கி விழுந்துட்டார். இங்க மார்ச்சுவரில பத்தாயிரம், இல்லன்னா… அதுக்கு மேல பணம் புடுங்கறத்துக்காக என்னென்னமோ சொல்லி லேட் பண்றான்…’ என்று உடைந்த குரலில் சொன்ன போது, என்னுடைய கனவிலும் ‘………………… அவர்கள் வயலின், மிருதங்கம் –எஸ். ஹரிஹரன்….’ என்ற அறிவிப்பாளரின் குரல் ஒலித்தது, தேய்ந்தபடி அறுத்தது. 

Thursday, May 31, 2012

நடுநிசி ஓசைகள்

திடீரென யாரோ சுவர் தாண்டும் சப்தம் கேட்டது,புரியாத பேச்சுக் குரல்களும்.

வாசல் விளக்கைப் போட்டால், ஒரு பெரிய ஏணி எங்கள் காம்பவுண்டுக்குள் இறங்கியிருந்தது.
20அடி உயரம், அதன் உச்சியில் நின்று, பக்கத்து ஃப்ளாட்டின் பால்கனியின் க்ரில்லை திறக்க முயன்றபடி ஒருவர். காம்பவுண்டு சுவர் அருகே சில்ஹவுட்டில் சில தலைகள்.


’சாரி சார், உள்ள சாவிய வெச்சு லாக் பண்ணிட்டோம், இந்தப் பூட்ட ஒடச்சா, உள் பக்கமா தொறந்துரலாம்’ என்றார் இதுவரை பார்த்தேயறியாத பக்கத்து பில்டிங்காரர்.

சாட்டின் இரவு உடையில் இரண்டு இளம்பதின்பருவப் பெண்கள். அவ்வளவு உயரத்தில் ஒரு சுத்தியலுடன் தொற்றிக்கொண்டு
இருக்கும் அப்பாவைக் கலவரத்துடன் பார்த்தபடி. அவ்ர் க்ரில்லின் சிறிய இடைவெளியில் கையை நுழைத்து, பூட்டை உடைக்க முயல்வதாய் அதை மெலிதாகக் தட்டிக்கொண்டிருந்தார். பார்த்தால் ஏதோ பாராட்டுவது போலிருந்ததே தவிர, உடைப்பது போலில்லை. எனக்கு அவர் முதுகைக் காட்டிக்கொண்டு சுவற்றோடு ஒட்டி நின்றுகொண்டிருந்தால் இது தான் ‘பின் நவீனத்துவக் கட்டுடைப்பாக இருக்குமோ என்று எண்ணினேன்.


‘ஈஸியா ஒடக்கறதுக்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா’ என்றேன். ஹிந்தி பேசுபவர்கள் என்பதால் ஆங்கிலத்தில் சொல்லலாமென ஆரம்பித்ததில், கற்பூரத்துக்கு என்னமோ சொல்லுவாளே என்று நினைத்தபடி, ‘டு யு ஹேவ் கேம்ப் ஃபயர்’ என்றேன்; மிகுந்த டென்ஷனில் எவரும் பொருட்படுத்தவில்லை :)

’கொஞ்சம் கற்பூரத்த எடுத்து அந்த சாவித்வாரத்துல திணியுங்க, நல்லா... நெறயவே.. அப்புறம் அதப் பத்த வையுங்க. அந்த சூட்டுல, (நா)லாக்க புடிச்சுகிட்டு இருக்கற தகடு சூடாகிடும். அப்புறம் தட்டினா, கொஞ்சம் தட்டினாலே வளைஞ்சு குடுக்கும்’. (சேலத்தில் ஒரு முறை ‘எப்படித் திருடுவேன், சத்தமின்றிப் பூட்டை உடைப்பேன் என்று போலீஸ்காரர்களிடம் திருடன் கொடுத்த வாக்குமூலத்தை என்னுடன் படித்த ஜயந்திநாதனின் நண்பர் ஒட்டுகேட்டிருந்ததே, என்னுடைய ‘கொள்ளை’ ஞானத்திற்குக் காரணம்). அவர் மனைவி இரண்டாம் மாடிக்கு ஓடி, அவர்களை எழுப்பி கற்பூரம் தீப்பெட்டி வாங்கினாள். அதற்குள்ளாகவே, அவர்கள் திருடன் வந்துட்டான் ரேஞ்சுக்கு ஓசைகளால் கலவரமாகி இருந்தனர். 

ஏணி கொஞ்சம் கால் வைத்தாலே ஆடியது. ஏட்டய்யாவின் பிஞ்சு மூக்கு போல, குஞ்சு மூங்கிலில் செய்யப்பட்டிருக்கலாம். ஒரு பெரிய கற்பூர டப்பாவிலிருந்து எடுக்கபட்ட இரு சிறு வில்லைகளைச் செலுத்தி, அவர்.. பற்றவைக்கவில்லை; கொளுத்தினார். ஏனெனில், சின்ன வில்லையின் முன்னே தீக்குச்சியின் நுனியின் நெருப்பே தீப்பந்தம் போல இருந்தது. ’போதாது, நிறைய வையுங்கள்,’ என்றேன். இருட்டில் பூட்டின் பருமனை என்னால் யூகிக்க முடியவில்லை (கற்பூர டப்பாவில் இருந்ததைக் காட்டிலும், கட்டுரையில் எவ்வளவு வில்லை!). முயற்சி தோல்வியடைந்தாய் முடிவு செய்தோம்.

’ஹாக்ஸா ப்ளேடு இருக்கா’

’இல்லையே.. நீங்க ட்ரை பண்ணிகிட்டேயிருங்க, நான் ஒரு நிமிஷம் கூகிள், இல்ல ஜஸ்ட் டயல்ல பூட்டு தொறக்கறவா யாரானும் இருக்காங்களா பாக்கறேன்’

இப்படிச் சொன்னதற்கே விடிவு காலம் பிறந்துவிட்ட்தாய் அக்குடும்பமே மகிழ்ந்தது. ஆனால், ஒரு நம்பர் கூட வேலை செய்யவில்லை. ரிங் போயிருந்தால் கூட, நடு ராத்திரி அதான் எடுக்கல என்று சமாதானப் படுத்திக்கொள்ளலாம். ஆனால், உபயோகத்திலில்லை என்றே குரல் வந்துகொண்டிருந்தது. நல்ல வேளையாக ஷேம் ஷேம் ஐடியா மொபைல் போல எரிச்சல் இல்லை. அதற்குள் இரண்டாம் மாடிக்காரர் தன்னிடம் ட்ரில்லர், கட்டர் இருப்பது நினைவுக்கு வந்து, ஈந்துதவினார்.

கிளை நுனியில் அமர்ந்தபடி வெட்டும் காமெடி போல, க்ரில் கதவைப் பிடித்துக்கொண்டே, கம்பியை பூட்டை அறுக்க முயன்றார். வேறு இடத்தில் பிடித்துக்கொள்ள நினைவூட்டிக் கொண்டேயிருந்தேன். தீப்பொறிகள் கையை முகத்தைத் தீண்டிச்செல்ல, அவரை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தோம் நானும் அவர் பெண்களும். குழந்தையின் அழுகுரல் போல ஒரு பிரசவ விடுதலைக்கான சப்தமெழுப்பியபடி தரையில் விழுந்தது பூட்டு.

அவர் படியிறங்கி வந்து சிரித்ததில், கதவு திறக்கப்பட்டுவிட்டதை அறிந்துகொண்டேன்.
அகாலத்தில் தொந்தரவு செய்ய நேர்ந்ததற்கு வருந்தி, நன்றி கூறிச் சிரித்தபடி சுவறேறிக் குதித்தனர் குழந்தைகள். 

’Hope you have started saving a little bit of compassion for burglars from now' என்றேன்.

Monday, May 21, 2012

Invictus



நீ கொடுத்து வைத்தவன். இது, ஸ்ப்ரிங்பாக்ஸின் பயிற்சி உடை என்று சொல்லும்போது, அதை ஏமாற்றத்தோடு மறுக்கும் சிறுவன் காட்சியில் மொத்தக் கதையும் சொல்லப்பட்டுவிட்டதைப் போலிருந்தது. மார்கன் ஃப்ரீமன் என்று அவ்வப்போது புத்திக்கு உறைத்தாலும், நெல்சன் மண்டேலாவின் நிஜ முகம், தூரத்தில் தொலைந்து கொண்டேயிருந்தது. கூகிள் செய்து ஒரு முறை நிஜ முகத்தைத் தேடினேன்.

மதிபா என்றழைக்கும் போதெல்லாம் அது ஒரு குடும்பப் பெயர், ஒரு பரம்பரைக்கு அல்லது தனிமனிதனுக்கு உரியது என்று தோன்றவேயில்லை. ஐயன், அய்யா, அப்பா போன்று தான் உணர்ந்தேன். என் பலவீனமோ மார்கன் ஃப்ரீமனின் பலமோ தெரியவில்லை, அந்த உருவம் தான் மண்டேலா, அந்தக் குரல் தான் அவருடையது என்ற எண்ணம் அழிக்கவியலாது படியத் தொடங்கியது, நான் மறுப்பேதுமின்றிக் கிடந்தேன். என் தந்தையைக் கண்டேன் என்று வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் சொன்னதாகப் படித்ததும், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என்றெல்லாம் சொன்னதும் அப்பா, அண்ணாக்கள் தலைமுறையின் உணர்வுகளும் அவர்கள் நினைவிலாடும் சிவாஜி கணேசன் நினைவும் வந்தது.
தன் மனதில் படிந்துவிட்ட வன்மங்களைக் களைதலில் மனித்னாகிறான் என்றால், ஒரு சமூகத்தின் அத்தனை தனி மனங்களிலும் படிந்து நிலை கொண்டு விட்ட வன்மம் நீக்குவது?

ஆனால் படம் பாதிக்கு மேல், மாமன் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளும் சியெஸ்கேவை வென்ற கிங்க்ஸ் லெவன், காரவேலன்சிங் போல ஆகிவிடுகிறது. ரக்பி, அதன் பின்னுள்ள ’நுகபிநி’கள் தவிர காந்தி போன்ற ஒரு சீரியஸ் படம் பார்க்க்வேண்டும், மார்கன் நடித்து என்று மெல்லிய அசதியுடன் உறங்கப்போனேன்.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.

Tuesday, March 27, 2012

உண்மையில் ஊனமுற்றோர் இவர்களா? அவர்களா?

ஏப்ரல் மாத சினேகிதியில் வந்த கட்டுரை. படங்களை க்ளிக் செய்து படிக்கலாம்.







Monday, March 26, 2012

பொய்திகள் வாசிப்பது புருடோத்தமன் - இம்முறை கொஞ்சம் லேட்டாக



    1.   டெபாசிட் இழந்த கட்சிகளின் அலுவலக வளாகங்களில் டப்பா செட்டி இஞ்சி லேகியம் விற்றவர் கைது. #ஜீரணிக்க முடியாத செயல்.

 2.வைப்பு நிதியாண்டுக்குள் தேர்தல் வைப்பு-நிதி இழப்பு ஈடுசெய்யப்படும் – பா.ம.க. ‘மாதிரி’ சட்டசபை தீர்மானம். 
#கூடங்குளத்தை ஆதரித்து, இலங்கையை எதிர்த்து, முல்லைப் பெரியாறு அணையை எதிர்த்து… இது எல்லாம் தீர்மனம் தீர்மானம்னு சொல்றாங்களே, ஏன், மானம் தீரணும்?




3.   ”வைப்பு மீட்பு இயக்கம்” – கட்சி வேறுபாடுகளை மறந்து தலைவர்கள் துவக்கம். தில்லித் தேர்தல் ஆணையம் நோக்கி ’நிதி’ கேட்டு நீண்ட பயணம். 

#சங்கர்&கோ-வில் முடிவு தெரிஞ்சு போச்சே, இனிமே கலீஞர் அண்ட் கோ, கேப்டநண்டுக்கோ, வைகோவண்டுக்கோ எல்லாம் என்ன செய்யும் எனக்  கேட்பவர்களுக்கு தக்க பதிலடியாம்.


4.   வெட்டி ப்ளாகர்கள் கண்டபடி கலாய்ப்பதால், இயக்கத்தின் பெயரை “டெபாசிட் மீட்பு இயக்கம்” என மாற்றுவதாகத் இனமானத் தலைவர் அறிவிப்பு. 

#நிதி மோசடிப் பிரிவின் கீழ் பொது நல வழக்கு போட்டுப் பாருங்களேன்.


5.   இயக்கக் கூட்’டங்’களில் நாக்கைத் துருத்திப் பேச தம்பிக்கு சிறப்பு அனுமதி-தமிழினத் தலைவர் தாயுள்ளத்தோடு அனுமதி. 

#துரோகிகளை பிறகு பார்த்துக்கொள்ளப் போவதாய் செவி வழிச் செய்தி.



6. கூடங்குளத்தில் உலை கிடையாது – அரசு திட்டவட்ட அறிவிப்பு. வீடுகள்-ஹோட்டல்கள்-சத்துணவுக் கூடங்கள் என எங்குமே சமைக்கக்கூடாது; அங்கிருந்து வெளியேறி அகதிகள் முகாமில் உலை வைத்து வடிக்கலாம் என்று அமைச்சர் நாராயணசாமி விளக்கம். #சொல்லிட்டாலும்…


7. ரஜினியின் கோச்சடையான் – கமலின் விஸ்வரூபம் படங்களில் ஜாக்கி ஷ்ராஃப், ராஹுல் போஸுக்கு பதிலாக வில்லன் வேடத்தில் அப்துல்கலாமை நடிக்க வைக்கவேண்டும் – ஞானி, முத்துகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் உருக்கமான வேண்டுகோள்.


#கோட்டா, ஆஷிஷ், சுமன் வயிற்றில் புளி


8. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அடியில் எரிமலை குறித்து அச்சம் தேவையில்லை – நடுவண் அரசு அறிவிப்பு. சேது சமுத்திரம் புகழ் டி.ஆர்.பாலு-நிதி சகோதரகள்-ராகுல் காந்தி கூட்டணியில் “எரிமலை தலைகீழ் திருப்பு” திட்டத்திற்கு மன்மோகன் அனுமதி. 

#இதனால், அது வெடித்தாலும் மெக்ஸிகோவில் பயிரிடப்பட்டிருக்கும் கிழங்குகள் அரிசி ஆகியவை தானே வேகும் என்றும், அதன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் ப.சி.-க.சி. கூட்டறிக்கை. (ப.சிதம்பரம்-கபில் சிபல்)


9.  குஜராத்திலும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ‘படம்’ பார்த்ததைத் தொடர்ந்து அனைத்து ச.ம.உ.க்களின் செல்பேசிகள் பறிப்பு. பதிலுக்கு பேஜர் அல்லது க்ரஹம் பெல் காலத்து டெலிஃபோன்களைக் கையில் எடுத்துச் செல்ல அனுமதி. 

#பேஜரில் ஆபாச செய்திகள் படிப்பதைத் தடை செய்ய முடியாது என்பதால் ‘பேஜர்-பேஜார்’ கோஷங்களைப் பெண்ணுரிமைச் சங்கங்கள் அறிவிப்பு. 



10. மணிமணியாய்க் கூடியிருந்து மாட்டிக்கொள்ளும் ஞானப் பழ கட்சியான பா.ஜ.க.வில் புதிதாக ’போர்னோ-க்ராண்ட்-நைட்-விங்க்’, மன்னிக்கவும், நாக்கு தடுக்கிறது, போமோக்ரானெட் அணி விரைவில் துவக்கம். 

#அந்த அணியினருக்கு ”ஸாம்சங் கேலக்ஸி” அலைபேசிகளும் தரப்படுமாம். இந்த அறிவிப்பு ச.ம.உ.க்கள் காதில் ’செமசீனுங்க-சோ செக்ஸி’ என்று தான் விழுந்திருக்கும். 


11.  ’கோ’ பட நாயகி தெரியும், ராதா மகள்; யார் இந்த ’க’ பட நாயகி – தொண்டர்கள் ஆர்வம். 

#கட்சித் தலை வேதனை என்பது இது தானோ!


12. ப்ரதிபா பாட்டீல் 22 நாடுகள் சுற்றுப்பயணம், செலவு 205 கோடி.
   #ஒரு கோடிக்குப் பத்து கோடின்னு வெச்சா கூட, எண்பது கோடிக்கு மேல ஆகாதே!


Wednesday, March 14, 2012

Tuesday, February 21, 2012

காதல் பத்து வகைப்படும் - ஒரு (comedy) ஆராய்ச்சியும், நீட்சியும்


சூப்பர் ஸ்டார் பஞ்ச் டயலாக் சொன்னா மட்டும் தான் அதுக்கு ஒரு M.A.Philosophy ரேஞ்சுக்கு விளக்கம் சொல்லணுமா? நாங்களும் விடமாட்டோம்ல.. விஷயத்துக்கு வருவோம்.
காதல் தெரியும். ஒரு தலைக் காதல் கேள்விப்பட்டிருப்போம். தறுதலைக் காதலும் தெரியும். வேற என்னென்ன தலைக் காதல் எல்லாம் இருக்குன்னு அதை அப்படியே கொஞ்சம் டெவெலப் பண்ணலாமா?
  • காதல்: எத்தனை தலை என்பது இருக்கட்டும், ஒரு கால் தான் இருக்கு. அத கவனிச்சீங்களா? அதுனால தான் ஒருத்தர ஒருத்தர் சொமந்துகிட்டு திரியறாங்க போல. #காதல்

  • ஒரு தலை: ஒரு உறைல ரெண்டு கத்தி not allowed. ஒரு தல தான் இருக்கலாம், ஓகே? #DecisionMaking
  • இரு தலை: ஜஸ்ட்டு மிஸ், ஒரு கமா. தல என்ன சொன்னாலும் அந்தம்மா இருன்னு ப்ரேக் போடுவாங்களே அதான் #இரு,தலைக் காதல்.
  • முத்தலை: இங்க தான் பிரித்தாளும் சூழ்ச்சி தேவைப்படுது. மூணு பேரு லவ்வு, முக்கோணக்காதல்னு டெண்ட்டு கொட்டாய்ல பாத்த படத்தையோ பாலச்சந்தரையோ நெனச்சு கொழப்பிக்காதீங்க. இது lover loving the kiss of love. இப்போ புரியுதா? #முத்த+லைக்+காதல்.
  • நாலுதலை: நான்கு தலைன்னு சில பேர் சொல்லலாம். அப்படிச்சொன்னா, அவங்கள நீ இன்னும் வளரவேயில்ல வயசுக்கே வல்லன்னு காமெடி பண்ணி அனுப்பிச்சிருங்க. குதலைன்னா மழலைன்னு ஒரு அர்த்தம். அதோட, அறிவிலான்னு ஒரு பொருள் இருக்கு. ஆகவே, நான் கடவுள் மாதிரி யாராவது நான் குதலைன்னா இப்போ காதல் தானே, நீ சொல்றது கல்யாணத்துக்கு அப்புறந்தான்னு அந்த அகோரிகளிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள். (உபரி அறிவேற்றல்: ’கேப்’ இருந்தால் தானே ’எஸ்’ ஆக முடியும். அதனால தான் ரெண்டையும் பிரிக்க முடியாம எஸ்கேப்-புனு சேர்ந்தே வருது.) ஆக்சுவலா, ரெண்டு பேர் லவ் பண்ணினாலும் வீட்ல சொல்லாம பீச், பார்க்குன்னு சுத்த முடியாது. ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க. எட்டு எனக்கு தெரியும்; ஆயிரம் உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க) அதனால, தோழியோட இவளும், தோழனோட அவனும் தனித்தனியா வந்துட்டு, கடற்கரைல தோழனையும் தோழியையும் கைவிட்டுட்டு கைகோத்துப்பாங்க. அவங்க பிக் அப் ஆயிக்கறது அவங்க பாடு. இது தான் #நாலுதலை.
  • அஞ்சுதலை: யாராவது பாத்துட்டா என்ன பண்றதுன்னு பைக்ல பின்னாடி ஒரு பொண்ணு உ.கால் to உ.தலை கவர் பண்ணி ட்ராவல் பண்ணுதே, அவள பின்னாடி ஒக்கார வெச்சு முன்னாடி ஒரு முகமூடிக் கொள்ளக்காரன் ஓட்றானே அந்த பயம் கலந்த பரவசக் காதல் தான் இந்த #அஞ்சு(ம்)தலை.
  • ஆறுசிரம்: அறு சிரம் இல்லை, கவலை வேண்டாம். ரெண்டு காதல் தோல்வி பார்ட்டிகள் லவ் பண்ணினா அது தான் ஆறுதலைக்காதல். அந்த ஆறுதல் உங்க இருவருக்குமே பிடிச்சிருக்கு. #ஆறுதல், லைக் ஆதல்.
  • ஏழ்தலை: ஏழு தலைக்கு என்னடா சொல்லப் போற மாட்டிக்கினியான்னு நீங்க குரூரமா சிரிக்கறது எனக்குத் தெரியுது. ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி ஆனா மாதிரி, ஒப்பிலி உப்பிலியானாற் போல, எழுதலை தான் உங்களுக்குப் புரியறதுக்காக ஏழ்தலைன்னு இறங்கி அருள் பொழிகிறது. எதை எழுதல? நீ எனக்கு உயிர், நான் உனக்கே உனக்கு… மன குடும்ப்பா மஞ்சி குடும்ப்பா;நூவே நாக்கு ப்ரேமா, ப்யார் கர்த்தி இப்படிப் பல மொழிகள்லயும் யாரோ யாருக்கோ பாட்டெழுதி எவரோ ட்யூன் போட்டு யார் பணத்துலயோ யார் யாரோ ஆடினாங்களே, அந்த பாட்ட இவிங்க ரெண்டு பேரும் பாடினாங்களே, அத எழுதி வெச்சு கையெழுத்து எல்லாம் போடல. பய புள்ளங்க, ரெண்டும் இப்போ வெவ்வேற எடத்துல கண்ணாலம் கட்டிக்கினு பரம சந்தோஷமா இருக்கு. #ஏழுதலைக் காதல்.
  • எட்டுதலைActivity to aim at achievement of Goal – ங்கற Principle of Commerce (kAmA+errs) இருக்கே, அது தான் இந்த எட்டுதல். அது பரவசமா கூட இருக்கலாம்; குறிக்கோளாவும் இருக்கலாம். கை நீளமா இருக்கறவங்களுக்கு பக்கத்து சீட்டுக்கு அடுத்த சீட் கூட எட்டலாம் :P அதான் #எட்டுதலை விரும்பும் மனது.
  • நவதலை: ஒன்பது = நவ. But, நவ = புதிய. மலர் தேடி தேன் பருகி, மலர் விட்டு மலர் தாவும் வண்டே, நீ ’கண்ட’ மலர்களிலும் அருந்துவதை எப்போது நிறுத்திவிட்டு சிங்கிள் புய்ப்பத்தில் சிங்க் ஆகி சிறப்புறுவாய் என்ற ஒலகமெகா Sinதனை சடன் ப்ரேக் போட்டு சம்மட்டியால் அடிப்பது தான் #நைன்லவ். (நயன்+ப்ரபு அல்ல).
  • 10Heads: ஒடனே ராவணனன் நெனப்பு வந்தா உங்கள ஒரு பய காப்பாத்த முடியாது. அம்மா ஆட்சி நடக்குது, ஞாபகம் இருக்கட்டும். 10 = பத்து. பத்து = பற்று, பந்தம், பாசம். அதனால, உங்க காதல் மேல பற்றுதலை வையுங்க. வரவு சரியாகும். சௌக்கியமா இருங்க. காதல் = காதலன்/காதலி = #பத்துதலை வை.
(படங்கள் உதவி: இணையம்)
[http://www.katturai.com/?p=2477 ல் சென்ற 14.2.12 அன்று வெளியிடப்பட்டது]