Thursday, September 1, 2011

மங்ககாத்தா, will become மானங்காத்தா?

Disclaimer: 1. 'தெய்வ திருமகள் திரையிடப்பட்டதும் 'அந்தப் படத்த பாத்ததுல எனக்கு Rs.875 மிச்சம்.  ஏன்னா, 125 ரூபா தான் டிக்கெட்டு; விக்ரம் ஆயிரம் ரூபாய்க்கு நடிச்சிருந்தாரு' என்று சிரிக்க வைத்த குறுஞ்செய்தி பாதிப்பில் என்னைக் கேட்டால், நிச்சயம்... மங்காத்தாவை, அதுவும் வெளியிடப்பட்ட அன்றே பார்த்ததில் எனக்கு  
எவ்வளவு மிச்சம் என்பதை, இப்பதிவின் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் சொல்வேன். 

2. அனேகமாக அனைத்து முற்றுப்புள்ளிகளுக்குப் பிறகும் ஒரு :P சேர்த்துப் படிக்கவும்.

கிரிக்கெட் சூதாட்டம், அதை முறியடிக்கவும் பெருந்தொகையைக் கைப்பற்றவும் காவல் துறை (பிரிதிவிராஜ் என்ற அர்ஜுன்) மேற்கொள்ளும் நடவடிக்கைகள், விநாயக் மகாதேவன் (அஜித்) என்ற பணி இடைநிறுத்தம் செய்யப்பட ஒரு காவல்துறை அதிகாரி, தாராவியின் ஒரு தாதாவான ஆறுமுகச் செட்டியார் (ஜெயப்ரகாஷ்), அவர் பொறுப்பில் வரும் ஒரு பெரும் பந்தயத் தொகையைக் (500 கோடி) கைப்பற்றி தப்பியோட நினைக்கும் கையாட்கள்(வைபவ் மற்றும் மஹத் ராகவேந்திரா), ஒரு சப் இன்ஸ்பெக்டர் (அஸ்வின் ககுமனு)ஒரு கம்ப்யூட்டர் தில்லாலங்கடி (பிரேம்ஜி அமரன்) ஆகியோர் செய்யும் தந்திரங்கள்-துரோகங்கள்-துரத்தல்கள் நிரம்பிய ஒரு கடைசி நேர திருப்பம் நிறைந்த உன்னதக் காவியம் தான் "மங்காத்தா". த்ரிஷா, லக்ஷ்மி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, துளசி என நடிகைகள்.



தாவுகின்ற ஒரு டாட்டா சுமோ அல்லது பொலீரோவின் மூக்கு மட்டும் திடீரெனத் தெரிகிறது எல்லோரின் கண்களுக்கும், அதுவும் ஒரு வெட்ட வெளி மைதானத்தில்!  அங்கே என்கவுன்ட்டருக்காக பின்னங்கைகள் கட்டப்பட்ட அரவிந்த், சுற்றிலும் போலீசார். குதித்து, சண்டையிட்டு, சுட்டு அவனைத் தப்பவைக்கிறார் அஜித். தொடர்வது லக்ஷ்மி ராயின் குறைச்சலான உடைகளுடன் ஒரு build up song. காலையில் தன் அறையில் கண்விழிக்கும் அஜித்தின் அருகிலேயே லக்ஷ்மி ராய். அவருடன் இருந்த 'இருப்பு' புரியாத நிலையில் hangover-ல் 'இனிமே சத்தியமா குடிக்கக் கூடாது' என்று சொல்லும் அஜித்துக்கு காதலி வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறாள். அந்தக் கால சிவாஜி மற்றும்  ரஜினி கமல் ரேஞ்சுக்கு காலில் ஆரம்பித்து, நகப்பூச்சு, சுடிதார் கழுத்து என வளர்ந்து முகத்தில் முடியும் கேமரா. 

அட! த்ரிஷா :) 

ஒருவரைத் துரத்தி இன்னொருவரை சமாளிக்கும் தவிப்பில் நிமிர்ந்து உட்கார்ந்து அதன் பிறகு ஜிவ்வென்று பறக்கும் என நினைத்தால், அணிவகுத்து நிற்கும் நக்ஷத்திர கூட்டத்தில் அனைவரையும் அறிமுகப்படுத்தி ஆளுக்கொரு சீன் வைத்து முடிப்பதற்குள்ளேயே 40% படம் முடிந்துபோகிறது.  

இருங்கள். முழுப் படமும் அனேகமாக நினைவிருப்பினும், காட்சிக்குக் காட்சி இங்கே எழுதப்போவதில்லை. ஆனால் சில விஷயங்களை சேர்ந்து கிண்டல் செய்யலாம்.

அர்ஜுன் அறிமுகமாகும் போது, பின்னால் தாயின் மணிக்கொடி போன்ற பாடல்கள் எல்லாம் இல்லை; பாவம் யாரும் விசில் கூட அடிக்கவில்லை (ஆனால் ஆண்ட்ரியா அறிமுகமாகும் காட்சியில் ஒரே கைதட்டல்கள்). ஆகஸ்ட் 15 தான் ரிலீஸ் செய்யவேண்டுமென்று அவர் பிடிவாதம் செய்யவில்லை என்பதும் ஆச்சிரியமே. விசாரணை அதிகாரி சுப்பு பஞ்சு தற்கொலை செய்துகொண்டதும் அர்ஜுன் தான் ஒரு ஆக்க்ஷன் கிங் என்று நிரூபித்து bokkies-ஐ மடக்கி, அது செய்தித்தாள்களில் வரும்போது, அண்ணா ஹசாரேவும் முதல் பக்கச் செய்திகளில் இருக்கிறார். தயாநிதி அழகிரி தயாரிப்பு என்பதால் கலைஞர் நியூஸ் தெரிகிறது. பிரேம் ஒரு காட்சியில் 'Angry Birds" விளையாடுகிறார்.

வசூலாகப் போகும் ஐந்நூறு கோடியை அடிக்கத் திட்டம் போடும் அஜித், பிரேம்ஜியை அழைத்துக்கொண்டு நன்கு ஏற்றிவிட்டு, இருவருமாய் குழறலாய் நடிக்குமிடத்தில் பிரேம்ஜி ஓவர் ஆக்டிங் செய்து அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கித்தருகிறார். 

Shutter Island - லியனார்டோ போல, முகத்தை அலம்பினால் சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது அஜித்துக்கு. Italian Job போல அரசு அலுவலக கம்ப்யூட்டர்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து போக்குவரத்து சிக்னலைக் கடத்தலுக்குச் சாதமாக்குகிறார் பிரேம். அந்த பெரிய கண்டெய்னர் லாரியை குறுக்கே நிறுத்தி மறுபக்கம் பணம் இருக்கும் சிறிய Container -ஐ மாற்றும் யுக்தி ஏதோ Just for Laughs, Gags நிகழ்ச்சியைத் தான் பார்க்கிறோமா என எண்ணத்தூண்டுகிறது. எதற்கும் இருக்கட்டும் என்று குருவி, வில்லு போன்ற படங்களை முன்னேற்பாடாய்ப்  பார்த்துவிடுங்கள்; உதவியாய் இருக்கும் இந்தப் படம் தேவலை என்று எண்ணுவதற்கு.

படம் முழுவதும் கிண்டல்கள் அள்ளித் தெளிக்கும் முயற்சியில், இளையராஜாவின் கொடி பறக்க வைக்கும் வகையிலும் ரஹ்மானைக் கிண்டலடிக்கும் வகையிலும், தீ படம் போல 786 என்றெழுதிய உலோகப் பட்டை பிரேமைக் காப்பாற்ற, எல்லாப்புகழும் இறைவனுக்கே என்கிறார்.   அஜித் வசந்த்&கோ பையனைக் கலாய்க்கிறார். அதுக்கு நான் என்ன இளிச்சவாயனா என்று சொல்லவேண்டிய இடத்தில், நான் என்ன சந்தானமா என்கிறார். சாம் ஆண்டர்சனையும் விட்டு வைக்கவில்லை. 

கோடிகள் கடத்தப்பட்ட விஷயமாய் அர்ஜுனிடம் பேசும் அஜித், 'ஏஏ.... ராஸ்ஸா...' எனச் சொல்வதும், ஜெயப்ரகாஷ் அஞ்சலியிடம், 'அம்பத்தஞ்சு வருஷ உழைப்பை ஒரு நாளில் அடைய ஆசைப்படுகிறான் உன் கணவன்' என்று சொல்லும் போதும், சம கால திஹார் அரசியல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

த்ரிஷாவுடனான டூயட் பாட்டு படமாக்கப்பட்ட விதம் அருமை. ஒரே அறையில் கொஞ்சமாக உடைமாற்றிக்கொண்டு இருவரும் ஆட, அவர்களுக்கு ஏற்றாற்போல் வீட்டின் உள்ளழகு, நிறம் எல்லாம் மாறுவது நன்றாக இருந்தது. சில காட்சிகளில் த்ரிஷா எலிக்குஞ்சு போல இருக்கிறார். அந்தப் பாடலில் கதி மாறுவதும் (சதுஸ்ரம்-திஸ்ரம்) குறிப்பிடத் தக்கதே. 

நகரங்களைக் காட்டும்போது அதன் பெயரும் மாநிலமும் காட்டப்படுகின்றன. மக்களுக்கு உருப்படியான தகவல் தரும் இது போன்ற சேவைகளை வியக்கும் அதே வேளையில், அறிவிப்பின்றி காண்பிக்கப்படும் ஒரு காட்சியில் வரும் கடற்கரை சென்னையா, மும்பையா அல்லது மயாமி கடற்கரையா என்று குழம்ப வேண்டியுள்ளது. :P 

மாதவன் மன்மதன் அம்பு-வில் செய்வதைப் போல குடித்தபடி திட்டம் போடும் காட்சி வருகிறது. தசாவதாரம் போல அஜித்தின் நிறைய முகங்கள் கொண்ட தொகுப்பு ஒன்றும் thala 50 என்றெழுதிய காயினும் காட்டுகிறார்கள்.  இடைவேளையில்,  'மங்ககாத்தா- will become மானங்காத்தா? என்று செய்தி அனுப்பினேன் நட்புகளுக்கு. இடைவேளை முடிந்து தாமதமாய் வருகிறவர்களை என்ன செய்வது? சற்று நேரம் என்ன சீன் போச்சு என்ற கவலை விசாரிப்புகள்.

ஒரு சோகப்பாட்டில் த்ரிஷா அமர்ந்திருக்க மற்ற நாற்காலிகளை மேசைகளின் மீது  கவிழ்த்து வைத்திருப்பது ஒரு சிம்பாலிக் ஷாட்டோ (கடையக் கட்டியாச்சு, ஓடீரு...) என எண்ண வைக்கிறது. அஞ்சலி இன்னும் ஒரு சுற்று வளமாகி இரண்டு வரிகளுக்குக் காதல் செய்து, நான்கு வரிகளில் அழுது காணாமல் போக, அதில் சரி பாதி ஆண்ட்ரியாவுக்கு. லக்ஷ்மி ராயைக் கொல்லும் அஜித், பாடல் காட்சிகளின் சிவாஜி ரேஞ்சுக்கு வாயசைப்பதில் 'அந்த' வார்த்தை ஒலி நீக்கம் செய்யப்பட பின்னும் தெளிவாகக் கேட்கிறது. தொழில் முறைப் பெண்ணாக வரும் பாத்திரம் என்றாலும், பெண்களைக் கேவலப்படுத்துவது போல இருந்தது :( 

அஜித் காரும் கையுமாக அலைவதால், Chasing சீன்களில் கதாநாயகனுக்கென்றே ஒருவர் பைக்கை சாவியுடன் சாய்த்து வைத்துவிட்டு, மர மறைவில் அல்லது சரிவில் ஒன்றுக்குப் போவதற்கு பதிலாக, தேவையான இடத்தில் U-turn வந்து விடுகிறது.

அஜித் ரஜினி போல சிரிக்கிறார், ராமன் ஆண்டாலும் பாடப் படுகிறது, குணா கமல் போலப் பேசுகிறார், குண்டுகள் குறுக்கும் நெடுக்கும் பறக்கையில் கவலையின்றி மணி மணி மணி என்று கண் மூடிக் கிறங்கி அழைக்கிறார். ஓரிருவர் நாய் ஏதேனும் வந்துவிடுமோ என்று ஏதோ திரையில் பாம்பு சீன் வந்தது போல காலைத் தூக்கி மேலே வைத்துக்கொண்டார்கள். விஜய் படக்காட்சியும் ஒருமுறை வருகிறது.

Feets, Childrens என்பது போல அர்ஜுன் Informations வந்திருக்கு என்கிறார். 
#வெங்கட்டு பிரபூ.. கவனிப்பா...

ரிவர்ஸ் கியரில் செல்லும் காரில் எல்லாமே புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் போலிருக்கிறது. அர்ஜுன் சுடாமல் வெறும் துப்பாக்கி சத்தம் மட்டும் செய்ய, அஜித்தும் அதே போல் செய்து மடக்குவதில், 'ஒரு போலீஸ் மனசு இன்னொரு போலீசுக்கு தான் தெரியும்' என்ற பின்நவீனத்துவம் வேறு நிறுவப்படுகிறது. வேகமாய் காரில் வந்து கதவைத் திறந்து வைத்தபடி ஸ்கிட் செய்து, நிற்பவனை வாரிக்கொண்டு போகும் காட்சி நன்றாக இருந்தது. அதுவும் சுட்டதாக இருக்கலாம். இருந்தால் லிங்க் கொடுக்கவும். சுமாரான ஒரு படத்தை பார்க்கிங் ரூ.ஐம்பதும் டிக்கெட் ரூ.நூற்றினார்பதும் கொடுத்துப் பார்த்ததில், நூறு ரூபாயாவது தண்டம், என்னை அழைத்துச் சென்றவனுக்கு.
மீதி தொண்ணூறில் ஒரு சாக்கலேட் டிரிங்கும் பாப்கார்னும்.   :D

ஒரு மாகசீனுக்கு இத்தனை குண்டுகள் என்று கணக்கெல்லாம் பார்க்காமல் வெடித்துக் கொண்டேயிருப்பதில் தீபாவளி ரிலீசோ என்ற சந்தேகம் வருகிறது.

'போலீஸ் இல்ல; பொறுக்கி' என்ற ஒரு வசனத்தை நீளப் படமாக்கியிருக்கிறார்கள். (ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் நீல வண்ணம் தான் தீம் கலர் போலிருக்கிறது). சண்டைக் காட்சிகள் பரபரப்புக்கு பதிலாக சோர்வடைய வைக்கின்றன. மொக்கை ஆளுங்களோட தீவிர சண்டை போடுமளவிற்கு பாவம் அஜித். 'தண்ணியடிச்ச ஒடனே ஆம்பிளையாயிருந்தாலும் பொம்பளையாயிருந்தாலும் மொக்கை ஜோக் அடிப்பாங்க' என்பது போல வரும் வசனம், முழுப்படத்தையுமே தண்ணியில் தான் எடுத்தார்களோ என எண்ண வைக்கிறது.